புதுதில்லி,செப்.1- மத்திய மோடி அரசின் தவறான நிர்வாகத்திறனால்தான் நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த கவலைக்குரியதாக மாறிவிட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 2019 - 2020 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிந்து விட்டது என்றும் கடந்த காலாண்டில் 5.8 சதவீதமாகவும் 2018ஆம் ஆண்டு ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் 8 சதவீதமாகவும் உள்நாட்டு உற்பத்தி இருந்தது. 5 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி சரிந்திருப்பது, நீண்ட பொருளாதார மந்த நிலைக்கான அறிகுறி. இதே பாதையில் பயணிக்கும் பட்சத்தில் பொருளாதார வீழ்ச்சியை இந்தியாவால் தாங்கிக் கொள்ள முடியாது .
உற்பத்தி துறை வளர்ச்சியானது 0.6 சதவீதம் என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு மற்றும் அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. போன்ற தவறுகளால் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. . மோடி அரசின் கொள்கைகளால் மிகப்பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் மட்டும் மூன்றரை லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். உள்நாட்டுத் தேவை குறைந்ததால் நுகர்வு விகிதம் 18 மாதங்களில் இல்லாத அளவு குறைந்து விட்டது. அனைத்து நிலைகளிலும் அரசின் தவறான நிர்வாகமே இதற்கு காரணம். பழிதீர்க்கும் அரசியலை விடுத்து, பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.